Tuesday 6 August 2019

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: EMIS விவரங்களுடன் இணைக்க வேண்டும்...பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்கம் கொண்ட ஆதார்  எண் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் செல்லும் என கடந்த வரும் 2018 செப்டம்பர்  மாதத்தில் உத்தரவிட்டது. எனினும், வங்கிக்கணக்குகள், செல்போன் இணைப்பு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு  ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆதார் எண் கேட்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவர்களை பள்ளியில்  சேர்ப்பதை தவிர்க்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, பள்ளி  மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்காக ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று தெரிவித்தார். பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பின்னர், சிறப்பு முகாம்களை நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.  ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு என்று அஜய் பூஷண் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மாணவர்கள், பெற்றோரின் ஆதார் எண்ணை சேகரித்து EMIS-ல் பதிவு செய்யவும், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு  பள்ளி வேலை நாட்களிலேயே புதிய எண்ணை உருவாக்கி பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 5 வயது முதல் 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கு புகைப்படம், கைரேகை புதியதாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment