Sunday 4 August 2019

அரசு பள்ளி மாணவர்கள் ‘நீட்’ இலவச பயிற்சி பெற 7-ந்தேதி தகுதி தேர்வு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீட், ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.தகுதி தேர்வு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கான வினா மற்றும் விடைக்குறிப்புகள் முதன்மை கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
மாணவர்கள் இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 12-ந் தேதிக்குள் (திங்கட் கிழமை) அனுப்ப வேண்டும்.அதனைத் தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டி தேர்வு பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதற்கான குறுந்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, ‘தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசே வடிக்கட்ட தீர்மானிப்பது வேதனையளிக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு கூடாது என்பதுதான் பொதுவான நிலைப்பாடு அதுவரை அரசு நடத்தும் பயிற்சிக்கும் தகுதித்தேர்வென்பது வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment