Tuesday 24 June 2014

குழந்தைகளின் கூட்டாளிகள் !


வி.எஸ்.சரவணன்
 
''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.
இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள்  சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.
சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில்  தொங்கி விளையாடினார்கள்.
''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.
வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.
''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.
''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.

    தரையில் விரியும் வானவில் !

    வி.எஸ்.சரவணன்
     ''அக்கா... ரொம்ப வெக்கையா இருக்கு... போய் குளிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டு ஓடுகிறான், குமார் என்கிற மாணவன். பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் ஐந்து நிமிடங்கள் குளித்துவிட்டு, தலையைத் துவட்டியவாறு வகுப்பில் அமர்கிறான்.
    நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலில் இருக்கும் வானவில் பள்ளி மிகவும் வித்தியாசமானது. மரங்கள், அருகிலேயே வயல், குளங்கள் என்று அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது. மாணவர்கள், கற்றல்  சுமையே தெரியாமல் மகிழ்ச்சியோடு படிக்கின்றனர். ஆசிரியர்களை அண்ணன், அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். இது உண்டு உறைவிடப் பள்ளி.
    இங்கே படிக்கும் மாணவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் வீட்டுக் குழந்தைகள். பெற்றோர்களில் ஒரு சிலரைத் தவிர யாருமே கல்வி கற்காதவர்கள்.
    ''எங்க அப்பா, அம்மா படிக்காததுக்கும் சேர்த்து நாங்க படிப்போம்'' என்கிற இவர்கள், விளையாட்டோடு கற்று வருகின்றனர்.
    ''மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் நெட்டிமாலை போடுவாங்க. அந்த மாலையில் இருந்த ஒரு நெட்டியில், சூப்பரான மனித பொம்மை செய்திருக்கிறான், நான்காம் வகுப்புப் படிக்கும் பாபு'' என்று பெருமையோடு சொல்கிறார் ஆசிரியை கௌதமி.
    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர் என்கிற வித்தியாசம் கிடையாது. எல்லோரும் சமம்தான். மதியம் சாப்பிடும்போது,  மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியை மீனாட்சியின் தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு பொரியலை, மாணவி அஞ்சலைதேவி எடுத்துச் சாப்பிடுகிறாள்.
    ''தெய்வானை என்கிற மாணவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா... இங்கு தளிர், துளிர் வகுப்புகளும் உண்டு. அந்த சின்னக் குழந்தைகளும் இங்கேதான் தங்கிப் படிக்கிறாங்க. அதில், ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது, தெய்வானை அந்தக் குழந்தையை ஒரு அம்மா போல கவனிச்சுக்கிட்டா'' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஆசிரியை வாசுகி.
    ''என் வகுப்பில் ஒரு பையன் படிக்கிறான். அவனை ஆடு, மாடு மேய்க்க அப்பா வித்துட்டார். அவனை விற்ற இடத்தில் சரியாகச் சாப்பாடு போடாமல் கொடுமை செய்திருக்காங்க. எப்படியோ... அங்கே இருந்து ஓடி வந்துட்டான். இப்போ இங்கே, படிப்பில் பிரமாதப்படுத்துறான்'' என்கிறார் ஆசிரியை மீனாட்சி.
    ஆசிரியர்கள் ஷாலினி, யாஸ்மின் பர்வீன், சந்திரன், சுரேந்தர்  ஆகியோர் தங்கள் மாணவர்களைப் பற்றி வித்தியாசமான அனுபவங்களைச் சொல்கிறார்கள். ''இங்கே வேலை செய்வது, மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது'' என்கிறார்கள்.
    வகுப்பறைகளில் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ''அங்கிள், இது நான் வரைஞ்சது...'' ''இது என்னோடது...'' என்று உற்சாகத்துடன் தங்கள் படைப்புகளைக் காட்டுகிறார்கள்.
    வானவில் பள்ளியை நடத்தும் பிரேமா ரேவதி ஓர் எழுத்தாளர், நாடங்களில் நடிப்பவர். ''சுனாமியின் பாதிப்பில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றுதான் இங்கே வந்தேன். பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டித்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். முதல் தலைமுறையாகப் படிக்க வந்திருக்கும் இந்தக் குழந்தைகள், வருங்காலத்தில் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும்'' என்கிறார்.
    ''அக்கா... என்னை சிவா தள்ளிவிட்டுட்டான்'' என்று ஒரு குட்டிப் பெண் சொல்ல, அவளைச் சமாதானப்படுத்தியவாறு அழைத்துச் செல்கிறார் பிரேமா ரேவதி.
    அந்தப் பசுமையான சூழலில் ஆட்டம் ஆடியவாறு, பாட்டுப் பாடியவாறு, பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் குரல், உற்சாகமாக காற்றில் ஒலிக்கிறது.

No comments:

Post a Comment