Friday 10 October 2014

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


                  வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும்,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
                    இந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது.

              அதேநேரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடரவும் தீர்மானித்துள்ளது.இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உணவு அமைச்சர் பஸ்வான் கூறியதாவது:பொது வினியோக திட்டத்தின் கீழ், பயன் பெறக்கூடிய ஏழைகள் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழைகள் எத்தனை பேர் என்பதை கண்டறிவது, கடினமான பணி. அதேநேரத்தில், வரி செலுத்துவோரையும், அரசு அதிகாரிகளையும் கண்டறிவது எளிது. அதனால், இவர்களை பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்குவதும், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிப்பதும் எளிதானது.மத்திய பிரதேச மாநிலத்தில், பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளும், வருமான வரி செலுத்துவோரும், பொதுவினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

             இந்த முறையை, மற்ற மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, விரைவில் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த உள்ளேன்.பொது வினியோக திட்டம் முறையாக செயல்படுவதில்லை என, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மேலும், பொது வினியோக திட்டத்தின் பலன்கள், உண்மையான ஏழைகளை சென்றடைவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து நீக்க பரிசீலிக்கப்படுகிறது.

               முந்தைய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டம் தொடரும். அந்த திட்டம் முடக்கப்படாது. புதிதாக ஒரு திட்டம் அமல்படுத்தப்படும் வரை, பழைய திட்டத்தை முடக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. முந்தைய மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களை, தற்போதைய அரசு தொடர விரும்பவில்லை எனக் கூறுவது தவறானது.உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த, ஏற்கனவே வழங்கப்பட்ட மூன்று மாத அவகாசம் முடிந்து விட்டது.

              அதனால், மாநிலங்களுக்கு மீண்டும் ஒரு முறை அவகாசம் வழங்கப்படும்.அத்துடன், உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்து, வருமான வரி செலுத்துவோரையும், அரசில் பணியாற்றும் பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளையும் நீக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பஸ்வான் கூறினார்.

                 உணவு மானிய செலவு கூடும்: lஉணவு பாதுகாப்புச் சட்டத்தை, இதுவரை, 11 மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதிலும், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா என, ஐந்து மாநிலங்கள் மட்டுமே, முழுமையாக அமல்படுத்தி உள்ளன.

                l25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதை இன்னும் அமல்படுத்த வேண்டி உள்ளது.lபார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டப்படி, தகுதி உடைய அனைவரும், 5 கிலோ அரிசி மற்றும் ௩ கிலோ கோதுமையை, 2 ரூபாய் விலையில் பெற்றுக் கொள்ளலாம்.lஅதேநேரத்தில், 'அந்த்யோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழைகளில் ஏழைகளாக உள்ள குடும்பம் ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு, 35 கிலோ அரிசி வழங்கப்படுவதும் தொடரும். அதில், எந்த மாற்றமும் இருக்காது.

                   lஉணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், மத்திய அரசின் உணவு மானியம், தற்போதுள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.lஅத்துடன், வருடாந்திர உணவு தானிய தேவையும், தற்போதுள்ள, 5.5 கோடி டன்னிலிருந்து, 6.8 கோடி டன்னாக உயரும்.

              மாநிலங்களுக்கு ஆறு மாதம் அவகாசம்:உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், அதை அமல்படுத்த மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                    கடந்த, 2013 ஜூலையில், உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதை இந்த ஆண்டு ஜூலைக்குள், மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. பின், இந்தக் காலக்கெடு, அக்டோபர், 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

              ஆனாலும், நாட்டில் உள்ள மக்களில், மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க வகை செய்யும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, பல மாநிலங்கள் செய்யவில்லை என்பதால், மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment