Tuesday 14 October 2014

வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி






         பள்ளிக்கு வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு அரசுப்பள்ளி.


     பெரும்பாலான பள்ளிகளில் காலை வேளையில் அவசரமாக புறப்பட்டு வரும் குழந்தைகள், சரியாக சாப்பிடுவதில்லை. ஒருசிலவீடுகளில் பெற்றோர் அதிகாலையில் பணிக்கு புறப்பட்டுச் சென்று விடுவதாலும் குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. வயிற்றுப் பசியுடன் வகுப்பில் அமர்ந்திருப்பதால், படிப்பில் கவனம் செல்வதில்லை.பிற பள்ளி நிர்வாகங்களைப் போல், கேரள-தமிழக எல்லையில் உள்ள கொழிஞ்சாம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இதை வேடிக்கை பார்க்கவில்லை. முதலில் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கும் முயற்சியில் இறங்கினர்.திட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, கேரள அரசின் கவனத்தை ஈர்த்தது.இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை பின்பற்ற நடவடிக்கை அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


      இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் கலிலுார் ரஹ்மான் கூறியதாவது:உடல் நலமே உள்ளத்தின் நலன். ஆகவே, முதலில் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி விட்டு, பின்னர் அறிவுப்பசியை போக்க முடிவு செய்தோம். இப்பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு வாரம் ஒருமுறை பொதுமக்கள், நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடை மூலம், தரமான காலை உணவு தயாரித்து வழங்குகிறோம். தயாரிக்க எளிது என்பதால், பெரும்பாலும் சூடான இட்லி, சட்னி, சாம்பார் வழங்குகிறோம்.காலை உணவை வயிறார சாப்பிட்ட பின், மாணவர்கள் சிறப்பாக படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். எங்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இத்திட்டம் பெரிதும் பயனளிக்கிறது. இத்திட்டத்தை சிறப்பான முறையில் பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடத்தி வருகிறோம். தேவையான, சமையல் பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும், நன்கொடை மூலமே பெறப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

          இப்பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பெற்றோர்-ஆசிரியர் சங்கத்துக்கான மாநில அரசு விருது கிடைத்துள்ளது. 2010ல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் கலீலுார் ரஹ்மானின் அயராத உழைப்பால், பாராட்டு மழையில் நனைகிறது இப்பள்ளி.

No comments:

Post a Comment