Saturday 31 May 2014

பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா

சூன் 8-ம் நாள் மாலை திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                                                                                              

Saturday 17 May 2014

25 சதவீத ஒதுக்கீட்டில் பெற்றோர் ஆர்வம் குறைவு: சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களே விநியோகம்

25 சதவீத ஒதுக்கீட்டில் பெற்றோர் ஆர்வம் குறைவு: சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களே விநியோகம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களை மட்டுமே இதுவரை பெற்றோர்கள் வாங்கிச்சென்றுள்ளனர்.
இவர்கள் தவிர அந்தந்த தனியார் பள்ளிகளிலும் சில பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கியிருக்கலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,551 மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது.
பல பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை வழங்க மறுப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை யாருக்கும் மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பான விவரங்களை பள்ளிகளின் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.
இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் 3,550 மெட்ரிக் பள்ளிகளில் 58,619 இடங்கள் உள்ளன. இதில் கடந்த ஆண்டு 23,428 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1,551 மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்பிலும், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். சென்னையில் மொத்தமுள்ள 4 ஆயிரம் இடங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கவில்லை எனக் கூறி இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து, கடந்த 2013-14 ஆம் கல்வியாண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த 23,428 மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25 கோடி 3 மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு சம்மதம் தெரிவித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கடிதம் வழங்கினர்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு, அந்தந்த பள்ளிகளிலும், சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் மே 18 வரை இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தில் இதுவரை 65 விண்ணப்பங்களை மட்டுமே பெற்றோர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். அந்தந்த பள்ளிகளில் பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றிருந்தாலும், மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிகவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த ஒதுக்கீடு குறித்து கல்வித் துறையும், தமிழக அரசும் பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு இடங்களுக்கு மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாநிலம் முழுவதும் இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு பெற்றோர் இடையே போதிய வரவேற்பில்லாமல் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் கூட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும்
தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3,550 மெட்ரிக் பள்ளிகளில் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 23,428 (40 சதவீதம்) மாணவர்களே இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஏற்கெனவே உறுதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி

By dn, சென்னை
First Published : 14 May 2014 04:31 AM IST
வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து 300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க உள்ளது.
விருப்பமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் 9444257308 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளளாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் சேர்க்கப்படுவர்.
இந்தப் பயிற்சித் திட்டம் ஆங்கில ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல், ஆங்கில வழியில் பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உரியது என இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பின் தேசிய செயலாளர் கே.இளங்கோ கூறியுள்ளார்.
மொத்தம் 30 மணி நேரம் கொண்ட இந்தப் பயிற்சி, வரும் ஜூன் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது. கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவை குறித்தும், சொல், இலக்கணம் சார்ந்த மொழித் திறன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு கோடை அறிவியல் முகாம்: அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் தொடங்கியது பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்


பள்ளி மாணவர்களுக்கு கோடை அறிவியல் முகாம்: அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கான கோடை அறிவியல் முகாம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆண்டுதோறும் கோடை அறிவியல் முகாம்களை நடத்தி வருகிறது. இந்தாண்டு முகாம், சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மே 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த முகாமில் மனோ தத்துவவியல், இயற்பியல், கணிதம், சூழ்நிலையியல், மின்னணுவியல், வேதியியல், வான சாஸ்திரம், யோகா உள்ளிட்ட துறைகளின் கீழ் பல்வேறு பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமின் முக்கிய அம்சமாக செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை அங்குள்ள கோளரங்கத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஐயம்பெருமாள் கூறியதாவது:
பள்ளிகளில் படிக்கும்போது மாணவர்கள் ஆய்வு ரீதியாகவும் யோசிக்க வேண்டும். ஆய்வுகளால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்த 3 நாள் முகாமின்போது மட்டுமல்லாமல், பள்ளி நாட்களிலும் மாணவர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது அறிவியல் மையத்துக்கு வந்து ஆய்வு ரீதியான அறிவை வளர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு உலகம் நானோ தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறது. எனவே மாணவர்கள் அதற்கு ஏற்றார்போல் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றார்.
முன்னதாக அறிவியல் முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனோதத்துவ நிபுணர் டாக்டர். ஜி.வி.குமார் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்
பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்
தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி, சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன், அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து, அம்மாநில அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாய்மொழி கல்வி ஆதரவான எண்ணம் கொண்ட அனைவருக்கும் இத்தீர்ப்பு பேரதிர்ச்சி அளித்தது.
எனினும், தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யவிருக்கும் கர்நாடக அரசு, அதில் நீதி கிடைக்கவில்லை என்றால், கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் இது குறித்து விவாதிப்பதுடன், தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தப் போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார்.
மேலும், தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயமாக்கி அரசியல் சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் இம்முடிவுக்கு அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தாய்மொழி வழிக் கல்விக்காக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உண்மையாகவே பாராட்டத்தக்கவை. அதேநேரத்தில் தமிழகத்தின் நிலைமையோ தலைகீழாக உள்ளது.
தமிழ்நாட்டை கடந்த 47 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்வழிக் கல்வியை திட்டமிட்டு அழித்து வருகின்றன. 1975 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த பதின்நிலை (மெட்ரிக்) கல்வி முறையை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி கல்வியை வணிக மயமாக்கியதுடன், ஆங்கில வழிக் கல்வி தான் சாலச் சிறந்தது என்ற நச்சு எண்ணத்தை தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஆழமாக விதைத்த பாவம் இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளைத் தான் சாரும்.
தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கக் கோரி கடந்த 30 ஆண்டுகளாக தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ஆங்கிலப் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை தொடங்குவதில் தான் முந்தைய தி.மு.க. அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும் போட்டி போடுகின்றன.
ஒரு காலில் கட்டி ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே சரியான தீர்வாக இருக்கும். மாறாக, ஒரு காலில் ஏற்பட்ட கட்டியைப் போலவே, இன்னொரு காலிலும் கட்டியை உருவாக்குவது எப்படிப்பட்டதாக இருக்குமோ, அதேபோல் தான் மெட்ரிக் பள்ளிகளை ஒழிப்பதை விடுத்து, அதற்கு போட்டியாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவதும் அமையும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கர்நாடகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மொழி, கல்வி தொடர்பான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களின் எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்புகள் தான் அரசுக்கு வழி காட்டுகின்றன. ஆனால், தமிழகத்தில் அத்தகைய அமைப்புகள் இல்லாததும், இருக்கும் தமிழறிஞர்கள் அரசியல்ரீதியாக பிரிந்து கிடப்பதும் நல்வாய்ப்புக் கேடானதாகும்.
ஆங்கில வழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்; ஆனால், தமிழ் வழிக் கல்வி தான் அறிவார்ந்ததாகவும், சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் இருக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன், அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மொழி, கல்வி பற்றிய விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க தமிழறிஞர்கள், கல்வியாளர்களைக் கொண்ட சுதந்திரமாக செயல்படும் அமைப்பையும் தமிழக அரசு உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

திறப்பு விழா விரைவில்....