Tuesday 29 April 2014

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்

 
      பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். 
 
           ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். இது போலவே தான், நம் வீட்டில் செயல்படும் வண்ணத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகளையும் பராமரிக்கிறோம். பல வேளைகளில், கண்ணாடியில் படிந்துள்ள கறைகளைப் போக்கும் சொல்யூசன்களைப் பஞ்சு அல்லது துணியில் நனைத்து, இந்த திரைகளைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். இது சரியா? இல்லை எனில் சரியான வழி என்ன என்று இங்கு பார்க்கலாம். கீழே என்ன என்ன வழிகளை மேற்கொள்ளலாம்; எவற்றை மேற்கொள்ளக் கூடாது எனத் தரப்பட்டுள்ளது.

          மேற்கொள்ளக் கூடாதவை: ஏரோசால் எனப்படும் கிளீனர் சொல்யூசன்களைத் திரையின் மீது ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யக் கூடாது. சிறிய அளவில் வெதுவெதுப்பான நீர் தவிர வேறு எதனையும் கொண்டு, திரைகளைச் சுத்தம் செய்தல் அதற்கு தீங்கு விளைவிக்கும். இது தவிர எந்த வேறு ஒரு திரவத்தினையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு திரவத்தினையும் நேரடியாகத் திரை மீது தெளித்தலும் கூடாது. 

         சுத்தம் செய்திட கனமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. திரையில் எளிதில் நீங்காத கறை இருந்தால், அதனை நம் நகம் அல்லது கூரான வேறு சாதனம் பயன்படுத்தி நீக்கக் கூடாது. 

          மேற்கொள்ளக் கூடியவை: மெல்லிய, உலர்ந்த, கறை எதுவும் இல்லாத, முடிந்தால் மைக்ரோ பைபர் இழையிலான துணி கொண்டு தான், இந்த வகை திரைகளைச் சுத்தம் செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நீர் மற்றும் மென்மையான சோப் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்திடலாம். 

           முதலில் உலர்ந்த மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடவும். இதற்கு சில அழுக்குகள் போகவில்லை என்றால், இரண்டு தனி துணிகளை எடுத்துக் கொள்லவும். சிறிய அளவில் மென்மையான சோப் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை இதில் சிறிய அளவில் நனைத்து திரையைச் சுத்தம் செய்திடவும். பின்னர், அதனையே நீரில் சோப் நீங்கும் அளவிற்கு அலசி, பின்னர் நன்றாகப் பிழிந்து, அதனைக் கொண்டு சுத்தம் செய்திடவும். இறுதியாக, உலர்ந்த இன்னொரு துணியைக் கொண்டு சுத்தம் செய்திடவும். ஐ பேட் போன்ற சாதனங்களின் திரையைச் சுத்தம் செய்திடவும் இந்த வழிகளைப் பின்பற்றலாம்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”   

         என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்தவர் பாவலரான பாரதிதாசன் அவர்கள்.

         ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள்

            பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
 
         பாரதிதாசன் அவர்கள்  தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேரநேர்ந்தது.. புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் கற்றார்... பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார்

           புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
சுப்புரத்தினம் பாரதிதாசனாக மாறுதல்...

         தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

       அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்தனர்.
படைப்புகள்
        எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
 
        ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
முக்கியமான ஒரு சில நிகழ்வுகள்

          பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது  மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

      அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக ‘தங்கக் கிளி பரிசு’ வழங்கப்பட்டது...

         அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ ம் வழங்கப்பட்டது...
           எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு முதன் முறையாக பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து முதன் முதலாக பாவேந்தர் பாரதிதாசன் விருதாக  ரூ. 10,000 தொகையும் , 4 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டபோது முதன்முதலாக இப்பரிசைப் பெற்றவர் பாவேந்தரின் சீடர் 'சுரதா' அவர்கள் தான்..

       கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வழங்கிய 'பாரதிதாசன் விருதை' முதன் முறையாகப் பெற்றவரும் பாவேந்தரின் சீடர் 'சுரதா' அவர்கள் தான்.

            தமிழக அரசு பாவேந்தரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, பாவேந்தரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது. பாவேந்தரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்கியது.

Monday 28 April 2014

CLASS VIII COURSE COMPLETITION CERTIFICATE

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி
அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).
அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.
பூங்கொடிக்கு வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தும்பேரி சென்றார். அங்கு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் எடுத்து செல்ல நள்ளிரவு ஆனது. இதனையடுத்து வேகமாக பணிகளை முடித்து விட்டு அந்த வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் ஊருக்கு செல்ல வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரெயில்கள் நிற்கும் இடத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வேகமாக வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பூங்கொடி மீது மோதியது.
ரெயில் என்ஜினீல் சிக்கிய ஆசிரியை உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலின் ஒருபகுதி ரெயிலில் தொங்கியபடி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதனால் ரத்தம், சதையுமாக அவரது உடல் சிதறியது. இதனை பார்த்து அவருடன் வந்த ஆசிரியர்கள் திடுக்கிட்டு அலறினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியை உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 4–ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. பூங்கொடியும் அவரது கணவரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பூங்கொடி இறந்ததால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Thursday 24 April 2014

தமிழகம், புதுவையில் இன்று வாக்குப் பதிவு

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுவையில் ஒரு தொகுதிக்கும் வியாழக்கிழமை (ஏப். 24) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 வேட்பாளர்களும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதேபோல
தமிழகத்தில் 5.51 கோடி வாக்காளர்களும், புதுவையில் 9 லட்சத்து ஆயிரத்து 357 வாக்காளர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர். தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள 17ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்-காமிரா கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் களத்தில் இறங்கியுள்ளது. பா.ஜ.க., தேமுதிக, ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட 7 கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் முதன் முறையாக தனித்துப் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால், தமிழக மக்களவைத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ், பாஜக அணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக, புதுவையில் தனித்துப் போட்டியிடுகிறது.
மொத்தம் 5.51 கோடி வாக்காளர்கள்: தமிழகத்தில் வாக்களிப்பதற்கு 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், பெண்கள் 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர். ஆண்கள், 2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 298 பேர்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் 55 பெண் வேட்பாளர்கள் உள்பட 845 பேர் களம் இறங்கியுள்ளனர். அவர்களில் 517 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 42 பேரும், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 9 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்: தமிழகத்தில் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் மிகவும் சிக்கலான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும், 17 ஆயிரம் வாக்குச் சாவடிகள் காலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை வெப்-காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இந்த நேரலை காட்சிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் போலீஸாரும், வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள்-அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய முறை அறிமுகம்: மக்களவைத் தேர்தல் பணியில் 2.93 லட்சம் அதிகாரிகளும், அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தமாக 64 ஆயிரத்து 190 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், ஒரு லட்சத்து 14
ஆயிரத்து 748 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் உள்ள 1,153 வாக்குச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாலை ஆறு மணிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்குப் பதிவு முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்பாக வாக்காளர்கள் வந்தால், அவர்களுக்கு பின் வரிசையில் இருந்து டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்



நாகப்பட்டினம்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் சிக்கலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை வட்டார பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையராக கீழ்வேளூர் வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க தமிழக அரசை கேட்பது, பாராளுமன்ற தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்- ஆசிரியைகள் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முன்பு சென்று சேர்வது மற்றும் தேர்தல் முடிந்தவுடன் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து திரும்ப வருவது வரை சிரமமும், பாதுகாப்பின்மையும் உள்ளதால், வாக்குச்சாடிகளுக்கு அச்சமின்றி சென்று வரும் வகையில் அருகில் உள்ள பஸ் நிலையம் வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டரை கேட்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு, மாவட்ட பிரதிநிதிகள் மைக்கேல்சாமி, ஆவராணி ஆனந்தன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday 10 April 2014

தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறோம்?

  
1
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வாக்கு தமிழகத்தில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால் சொல்லப்படுகிறது. அவர் சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நல்ல நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது.
உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5% கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5% நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26% மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தண்ணீரில் ஏற்றத்தாழ்வு
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 1.5 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் கிடைக்கிறது! ஆனால், குவைத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 10 கனமீட்டர் தேறினால் அதிசயம். இந்தியாவைப் பொறுத்த அளவில் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தலைக்கு சுமார் 2,200 கனமீட்டர்கள்.
சீனர்களுக்கும் 2,250 கனமீட்டர்கள் கிடைக்கிறது. கிடைப்பது குடிநீருக்கு மட்டுமல்ல. பாசனத்துக்கு, குளிப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு, நமக்கு உணவாகப்போகும் மிருகங்களுக்கு - இவை எல்லாவற்றுக்கும்தான்.
இன்று உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. இது 2050-க்குள் 900 கோடிக்கும் மேல் உயர்ந்துவிடும். உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம், விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர்த் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27% குறைவாகக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தட்டுப்பாடு இருக்காது.
வளரும் நாடுகளில்தான் தட்டுப்பாடு. அடிமேல் அடி அவர்கள் மீதுதான் விழும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அது எல்லை நிலங்களுக்காக இருக்காது; தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் முரண்களுக்காக இருக்கலாம்.
இந்தியாவின் நிலை
தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்ன என்பதை ஐ.நா. சபை நிர்ணயம் செய்திருக்கிறது. வருடத்துக்குத் தலைக்கு 1,700 கனமீட்டர்களுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு அறவே இல்லை என்று சொல்லலாம். 1,700 கனமீட்டரிலிருந்து 1,000 கனமீட்டர்கள் கிடைக்கும் நாடுகளில் மக்கள் தண்ணீர் குறைபாட்டை உணர்வார்கள். ஆனால், கடுமையான தட்டுப்பாடு 1,000 கனமீட்டர்களுக்கும் குறைவாகக் கிடைக்கும் இடங்களில்தான் நிகழ்கிறது.
முழுவதுமாகப் பார்த்தால், இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், கிடைக்கும் தண்ணீரை நாம் திறமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4% மட்டுமே சுமக்கின்றன.
ஆனால், அவை சுமக்கும் வண்டலின் அளவு 35% சதவீதத்துக்கும் மேல்! இதனாலேயே நதிகளின் ஆழம் குறைந்து கரைகள் உடைபட்டு வெள்ளங்கள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் யாருக்கும் பயனின்றி தண்ணீர் அழிவையே ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் நிலை
சென்ற வாரம் சென்னையில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டா?” என்று கேட்டேன். “கிடையவே கிடையாது” என்றார். “காசு கொடுத்தால் டேங்கரில் தண்ணீர் வந்துவிடும்.” “மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” “இரண்டாயிரம் இருக்கும்.” மாதம் இரண்டாயிரம் தண்ணீருக்காகச் செலவுசெய்யும் வசதிபடைத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்குச் சரியான விடை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் 750 கன மீட்டர்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று தமிழக அரசின் ஆவணம் ஒன்று கூறுகிறது. தட்டுப்பாடு நிலை என்று ஐ.நா. சபை நிர்ணயித்த 1,000 கனமீட்டர்களை விட இது 25% குறைவு. பாலைவனப் பிரதேசம் என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானில் தலைக்கு 780 கனமீட்டர்கள் கிடைக்கிறது. நமது நிலைமை பாலைவனத்தைவிட மோசம். கிடைக்கும் நீரில் 45 சதவீதத்துக்கும் மேல் நிலத்தடி நீர்.
நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அண்டை மாநிலங்களிலும் உபரி நீர் அதிகம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும், நிலத்துக்குக் கீழ் கிடைக்கும் நீரில் 80 சதவீதத்தையும் வருடந்தோறும் பயன்படுத்திக்கொண்டுவருகிறோம். இதில் 75% சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.
வழி என்ன?
தமிழகம் நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. விவசாயத்துக்கு உபயோகிக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அண்டை மாநிலங்கள் முன்னேறும்போது அவர்களது தேவைகளும் அதிகரிக்கும். எனவே, நாம் தண்ணீருக்கு மற்றைய வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவை உற்பத்திக்கு ஊறு ஏற்படாமல் குறைக்க வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, அரிசி உற்பத்திக்கு ஒரு கிலோவுக்கு 5,000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை 50 சதவீதத்தைக் குறைத்து உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி.
நதிகளை இணைப்பது ஒரு வழி. போகாத ஊருக்குப் போகும் வழி. அப்படியே இணைக்கப்பட்டாலும், நாம் நாட்டின் கடைக்கோடியில் இருப்பதால், எல்லோருக்கும் போக மிச்சம் இருப்பதுதான் வந்துசேரும் அபாயம் இருக்கிறது. மிச்சமே இல்லாதும் போகலாம்.
மற்றொன்று, கடல் நீரை நல்ல நீராக்கும் வழி. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, இதைப் பெரிய அளவில் செய்வது சாத்தியம் அல்ல. பணம் அதிகமாகச் செலவாகும். மேலும், இந்த முறையினால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது மிகவும் கடினமான காரியம்.
எனவே, இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அதைவிட அவசியம். வருமுன் காக்கத் தவறினால், சென்னை போன்ற நகரங்களில் வாடகையை விட தண்ணீருக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் துன்பப்படப்போகிறவர்கள் கீழ்த்தட்டு மக்களே.
- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், 
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, 
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

Wednesday 9 April 2014

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

     அரசு ஆரம்பநடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில்குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்யஇயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

          மாநிலம் முழுவதும்23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள்7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்குதமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகைமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்குபிரித்து தரப்படுகிறது. இதில்பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த,சில நாள் கால தாமதம் ஆனாலும்உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாகமாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்,மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை,மின்வாரியத்திற்குதொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது. மேலும்மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில்30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை,மாவட்ட வாரியாகதொடக்கக் கல்வித் துறைஇயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில்,இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும்மின் வாரிய அதிகாரிகளுக்குஇயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும்புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனதுறை வட்டாரம் தெரிவித்தது. 
 
          அரசு உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை,அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள்மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். இந்த பள்ளிகளிலும்ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே,தொடக்கக் கல்வித் துறையை போல்பள்ளிக்கல்வி இயக்குனரகமே,நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால்பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது எனஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைதுவக்கப் பள்ளியாகவும்ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைநடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

           பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள்.

                அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா?

             அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின்மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா? அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில்கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?

                        நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்;சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா?தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார்வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும்குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள்.

                   அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையாவது அறிந்ததுண்டா?வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா?பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டுஅலையவிட்டு இருப்பதையாவது அறிவார்களா?கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதேஇடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்?இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)-க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

               அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோஅல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.

Article by Mrs.- டாரத்தி

Monday 7 April 2014

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

         அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

          மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை:

           நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளி:

            தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின், அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில், 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். இங்கு, ஆறு முதல், 14 வயது வரையுள்ள, பள்ளி வயது குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், கிராமக்கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பான பயிற்சி வழங்குவது, எஸ்.எஸ்.ஏ.,வின் முக்கிய குறிக்கோள். எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'நம்ம பள்ளி, நம்ம குழந்தை' என்ற தலைப்பில், அழகிய வண்ணப்படங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய கல்வி:

              கிராமக்கல்வி குழு செயல்பாடுகள், குழந்தைகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், சட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் கூட்டம், மேம்பாட்டு திட்டத்தில் இருக்க வேண்டியவை, பள்ளி கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் உள்ளிட்ட விவரங்கள், இந்த கையேட்டில் அடங்கி உள்ளன. இந்த கையேடு, தமிழகத்தில் உள்ள, இரண்டு லட்சத்து, 65, 284 கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கையேடு வழங்கப்படும்.

            எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு துவக்கப்பள்ளியில், வரும், 2014- - 15ம் கல்வியாண்டில், பள்ளி மேலாண்மை குழு மூலம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

கையேடு:

                இதற்காக, தொடக்க கல்வி இயக்கம், சென்னை யுனிசெப் மற்றும் மதுரை மனித உரிமை கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கையேட்டை தயாரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

          இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.

        இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

            இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.

ரூபாய்

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

          அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், "அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப்பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்" என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று வழக்கை முடித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

          திருநெல்வேலி கொட்டாரன்குளம் சுரேஷ் தாக்கல் செய்த மனு: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கழிப்பறையை சுத்தம் செய்து, பிற பணிகளை செய்யுமாறு, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் மனதளவில் பாதித்து, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்க வேண்டும். போதிய துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க, உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
 
           நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பதில் மனு: வகுப்பு நேரங்களில், சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டடாயப்படுத்தியதாக புகார் வரவில்லை. அடிப்படை சுகாதாரத்தின் அவசியம் பற்றி, மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. கழிப்பறை வசதி இல்லாத 2,733 பள்ளிகள், குடிநீர் வசதி இல்லாத 702 பள்ளிகளுக்கு, &'நபார்டு&' திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
          மாநிலத்தில் 36 ஆயிரத்து 813 அரசுப் பள்ளிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும். பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 5,712, முழுநேரம் 384, பகுதிநேரமாக 5,950 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். குழந்தைகளை தண்டிக்கக்கூடாது; துன்புறுத்தக்கூடாது என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், என குறிப்பிட்டார்.
 
           நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு: அரசுத்தரப்பு பதில் மனுவை, பதிவு செய்து கொள்கிறோம். மகாத்மா காந்தி, "தங்கள் கழிப்பறையை, தங்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்" என்றார். சுகாதாரத்தை, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதன் மூலம், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர முடியும் என்பதை, மனுதாரர் கவனிக்கத் தவறிவிட்டார். மனு மீதான விசாரணை முடிக்கப்படுகிறது, என்றனர்.

Friday 4 April 2014

D A 10%

விவாத மேடை


Posted: 01 Apr 2014 07:28 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள "கன்டின்யுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் வால்யுவேஷன்' (சி.சி.இ.) மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியா?'

By dn
First Published : 02 April 2014 02:16 AM IST
உண்மையான மதிப்பீடு
சி.சி.இ. மதிப்பீட்டு முறை என்பது ஒரு மாணவனின் கற்றல் அளவுகளை தொடர்ச்சியாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்து அளிக்கப்படும் மதிப்பெண்கள் ஆகும். இதுதான் உண்மையான மதிப்பீடு. வருடக் கடைசியில் தேர்வு என்ற பெயரில் ஒரே முறை மாணவனது தகுதியை அளவிடுதல் சரியாகாது. வருடம் முழுவதும் நல்ல தேர்ச்சியை பெற்றவன்கூட ஆண்டுத் தேர்வில் சில காரணங்களால் சரியான மதிப்பெண் பெற முடியாமல் போய்விடலாம். அதற்காக அவன் தகுதியை குறைத்து மதிப்பிடுவதும் அவனுக்கு உயர்கல்வி மறுக்கப்படுவதும் சரியான அணுகுமுறை அல்ல. சி.சி.இ. மதிப்பீட்டு முறையே சரியான மதிப்பீட்டு முறை.
கலைப்பித்தன், கடலூர்.

அடிப்படை வசதி
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆயினும் அதனை செயல்படுத்துவதற்கு முன்பு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றுள்ளனவா என்பதை அறிவது அவசியம். ஏனெனில் மாணவர்களிடையே திறனை மேம்படுத்த ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பல்திறன் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் அவசியம். அவற்றை மேம்படுத்தாமல் மதிப்பீடு செய்யும் முறையை மட்டும் செயல்படுத்துவது என்பது சரியல்ல.
துளிர், மதுரை.

நோக்கம்
இது சரியான முடிவு. ஏனெனில் ஒரு மாணவனின் செயல்பாட்டுத்திறன் ஆண்டு இறுதித் தேர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்காமல் ஆண்டு முழுவதற்குமான அவனுடைய செயல்பாட்டுத்திறன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மாணவனின் செயல்பாடு, புரிந்து கொள்ளும் திறன், ஆளுமைத் திறன் போன்றவை மேம்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரை தேர்வு நேரத்தில் மட்டுமே படித்த மாணவர்கள் இனி வருடம் முழுவதும் பாடங்களை படிப்பார்கள். கல்வித் திட்டத்தின் நோக்கம் மாணவர்களை முழுமையாகச் சென்றடையும்.
எஸ். குமரவேல், அம்மையப்பன்.

ஏமாற்றம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறை ஒரு மாயை. மாணவனின் கல்வித் திறனை இம்முறையில் அறிவதென்பது இயலாதது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுபோல் ஆகும். இம்முறையினை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகவே முடியும். மாணவர்களிடத்திலும் தன்முனைப்பு குன்றி தளர்ச்சியும்,அலட்சியப் போக்கும் மேலோங்கும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

நல்ல முறை
ஒரு மாணவனின் தகுதியை அவன் வருட முடிவில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடுவது சரியல்ல. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கும்போது, மாணவனின் முழுத்திறமையையும் அளவிட முடியும். மாணவன் பெறும் மதிப்பெண்கள் கிரேடு அடிப்படையிலும் வழங்கப்படுவதால், மதிப்பெண் முறையில் ஏற்படும் மனப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். இது மிகவும் நல்ல முறை.
டி. சேகரன், மதுரை.

பயனுள்ள முறை
விரிவான மற்றும் தொடர் மதிப்பீடு சமச்சீர் முப்பருவ கல்விமுறையில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில் வளரறி மதிப்பீடு 1 (ஊஅ 1), வளரறி மதிப்பீடு 2 (ஊஅ 2), தொகுத்தறி மதிப்பீடு (நஅ), என்னால் முடியும், நானே செய்வேன் (ஐ ஸ்ரீஹய், ஐ ஜ்ண்ப்ப் க்ர்), செயல் திட்டம் (டழ்ர்த்ங்ஸ்ரீற் ரர்ழ்ந்), மாணவர் திரள் பதிவேடு (இன்ம்ன்ப்ஹற்ண்ஸ்ங்) போன்ற செயல்பாடுகளோடு, தரநிலை (எழ்ஹக்ங்) முறையில் மதீப்பீடு செய்யப்படுகிறது. இம்முறையில் பதிவேடுகள் பராமரித்தல் கூடுதல் பணிப்பளுவே தவிர, மற்றபடி பயனுள்ள முறையாகும்.
வீ. இராமலிங்கம், முத்துப்பேட்டை.

கடிவாளம்
இம்முறையை மற்ற பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டாம். கிராமப்புற பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் நடைமுறையில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்க்க இன்றைய கல்வித் திட்டத்திலேயே பல்வேறு நல்ல முறைகள் உள்ளன. அவற்றை செம்மையாக நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. இம்முறை, மாணவர்களின் சிந்தனைக்கு கடிவாளம் போட்டது போலாகும்.
முருகு சிற்றரசன், திருமுட்டம்.

சரியானதே
ஆண்டு முழுவதும் ஒரே புத்தகம். பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு புத்தகச் சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். காலாண்டு, அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் ஏதோ காரணத்தினால் ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வியை அடைந்தவராவார். எனவே, தொடர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீடு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்தல் சரியானதே. வரவேற்கத்தகுந்ததே. சி.சி.இ. மதிப்பீட்டு முறை அமலாக்கல் பள்ளிக் கல்வித்துறையின் சீரிய பணியாகும்.
மு. கிருட்டிணசுவாமி, வேலூர்.

ஆளுமைத்திறன்
சி.சி.இ. என்னும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பது ஒழுங்குமுறை, செயல்திறன், ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் சார்ந்த அனைத்து கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடும் முறையாகும். இந்த மதிப்பீட்டு முறையானது தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித் துறையால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவன் பரந்து பட்ட அறிவு பெற இம்முறை உதவுகிறது. இந்த மதிப்பீட்டு முறை மாணவனை ஆளுமைத் திறன் மிக்கவனாக மாற்ற உதவுவதனால் அனைத்து பள்ளிகளிலும் இம்முறையை செயல்படுத்தலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தேர்வு தேவை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியே. ஆனால் இப்போதுள்ளபடி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் 8ஆம் வகுப்பு முடிவில் வருவாய் மாவட்ட அளவிலும் 5ஆம் வகுப்பு முடிவில் கல்வி மாவட்ட அளவிலும் கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு இருப்பதால்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். இல்லாவிட்டால் படிக்க மாட்டார்கள்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

பொருந்தாது
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நகரங்களில் இருப்பவை. அதில் பயிலும் மாணவர்களும் நகரங்களில் வாழ்பவர்கள். கணினி அவர்களுக்கு விளையாட்டுக் கருவி. பெற்றோர்களும் உறவினர்களும் கல்வியில் மேம்பட்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரமும் சிறப்பானவை. இவற்றையெல்லாம் கிராமப் புறங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. எனவே சி.சி.இ. எனப்படும் தொடர் மதிப்பீட்டு முறை நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

கவலை இல்லை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மதிப்பீட்டு முறை சரி. மதிப்பீடு செய்யும் பொழுது மாணவ, மாணவியர்கள் செய்யும் சிறு சிறு பிழைகள் அப்போதைக்கு அப்போதே திருத்தப்படுகிறது. எனவே இது ஒரு சிறந்த முறையே. இதனால் இறுதித் தேர்வு நடக்கின்றபோது விழுந்து விழுந்து படிப்பது தவிர்க்கப்படுகிறது. செமஸ்ட்டர் தேர்வுமுறை நடத்தப்படுவதும் இதற்காகத்தான். சில பாடங்களைப் படித்துத் தேர்வு எழுதிவிட்டால் அந்தப் பாடங்களைப் பற்றிய கவலை இல்லை.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

முழு பதிவேடு
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழங்கும் பள்ளி சார்ந்த மதிப்பீட்டு சான்றிதழ் மாணவரின் கல்வித்திறன், செயற்பாடு, விளையாட்டு, உடல்நலம், தனித்த மற்றும் சமூகப் பண்புகள், உயர் குணங்கள், நுண்கலைத்திறன் ஆகியவற்றை தனித்தனியே கண்காணித்து, மதிப்பிடுகின்றது. முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அட்டையுடன் வழங்கப்படும் இச்சான்றிதழ் ஒரு மாணவரைப் பற்றிய முழுமையான பதிவேடாகும். சி.சி.இ. முறையை அதன் நோக்கங்களைப் புரிந்து மிகச்சரியாக பின்பற்றினால், ஒரு மாணவனை செழுமையாக உருவாக்க முடியும்.மதிப்பெண்களுக்கான மாணவரை தயாரிக்காமல் ஆளுமைமிக்க மாணவரை உருவாக்க சி.சி.இ. முறை உதவும்.
டி.எஸ். இராஜேஸ்வரி, தூத்துக்குடி

Wednesday 2 April 2014

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 
            அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
          இந்த எதிர்ப்பின் காரணமாக கர்நாடகாவில் 1,029 பள்ளிக்கூடங்களை மூடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யக்கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.