Wednesday 5 August 2015

குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          காந்திகிராம பல்கலையில் ஜெர்மன் கருவி மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.ஜெர்மன் லிப்னிஸ் ஹானோவர் பல்கலை, காந்திகிராம பல்கலை மனையியல் துறை இணைந்து குழந்தைகள் ஆய்வு மையத்தை அமைக்கின்றன. இந்த மையம் மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன் அளவிடப்பட்டு மேம்படுத்தப்படும். 


         இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள ஜெர்மன் பல்கலையின் ஆய்வாளர்கள் கிருஷ்டன்பேட்டா, போடோ பிராங்க் ஆகியோர் காந்திகிராமத்திற்கு வந்தனர். அவர்கள் குழந்தைகளின் மொழி அறிதல் திறனை அளவிடும் பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளனர்.இந்த கருவியை பயன்படுத்தி காந்திகிராம குழந்தைகள் மையத்தில் முதற்கட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. மையத்தின் 4 திசைகளிலும் 'கேமரா' பொருத்தப்படும். அதில் மையத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ எடுக்கப்பட்டு கருவியில் பதிவு செய்யப்படும்.

பின் ஒரு தனி'சாப்ட்வேர்' மூலம் குழந்தைகளின் மொழி அறியும் திறன் ஆய்வு செய்யப்படும்.மனையியல் துறை பேராசிரியர் கவிதாமைதிலி கூறியதாவது: கருவியில் 2 மாதம் முதல் 2 வயது குழந்தைகளின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும். ஏற்கனவே இந்த கருவி மூலம் ஜெர்மன் ஆய்வாளர்கள் தான்சானியா நாட்டில் ஆய்வு செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஆய்வு செய்கின்றனர். இந்த கருவி மூலம் மையத்தில் பாதுகாவலர்களின் எந்தெந்த தூண்டுதலுக்கு குழந்தைகள் ஆர்வமாக கற்கின்றன என்பது ஆய்வு செய்யப்படும்.பின் பெரும்பான்மை குழந்தைகளின் மொழி அறியும் திறன் அடிப்படையில் புதிய கற்பித்தல் முறை தயாரிக்கப்பட்டு, பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment